சேந்தமங்கலம் : தொடர் மழையால், கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. குறி்ப்பாக கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால், காய்ந்து கிடந்த அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
இதனிடையே கடந்த சில நாட்களாக கொல்லிமலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது அதிகரித்துள்ளது. அவர்கள் அறப்பளீஸ்வரர் கோயில், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, சினி பால்ஸ், எட்டுக்கை அம்மன் கோயில், மாசிலா அருவி, நம் அருவி, சிற்றருவி, வாசலூர் பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை வியூவ் பாய்ண்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து செல்கின்றனர். வாசலூர்பட்டி படகு இல்லத்தில் குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்து உற்சாகமடைகின்றனர். மேலும் வீடு செல்பவர்கள் கொல்லிமலையில் விளையக்கூடிய அன்னாசி, பலா, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்.