கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை ஒரே நாளில் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்தனர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 200 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகாலை முக்கடல் சங்கமத்தில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிக்கும் மக்கள் கடலில் குளித்து விட்டு பகவதியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

பின்னர் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு சேவை மூலம் சென்று பார்வையிடுகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக வளாகத்தில் டிக்கெட் எடுத்து சென்று வர நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். நேற்று மட்டும் 8200 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். இதுபோல் காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம், காட்சி கோபுரம் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சன் செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் மாலை சூரியன் மறையும் காட்சியை ஏராளமானோர் ரசித்தனர். கன்னியாகுமரி பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வரத்து காரணமாக கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Related Stories: