பென்னாகரம் : கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு, வார விடுமுறை தினங்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். காவிரியில் தண்ணீர் வரத்து முற்றிலும் சரிந்த நிலையில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல், ஒகேனக்கல் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி வரை 200 கன அடி மட்டுமே நீர் வரத்து இருந்து வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், துணை நதியான பாலாறு பகுதியிலும், லேசான மழை பெய்து வருவதால், கடந்த 18ம் தேதி முதல் ஒகேனக்கல்லுக்கு 1000 கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், ேநற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் மெயினருவியில் கொட்டிய தண்ணீரில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்து, பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகையும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் பரிசல் ஓட்டிகள், மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால் ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.