×

கோபி அருகே கொடிவேரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், அணைக்கு வரும் பெண்களிடம் குடிமகன்கள் கலாட்டா செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கும், காலிங்கராயன் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கருக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

தடுப்பணையாக இருப்பதால் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் இங்கு அரசு விடுமுறை, பண்டிகை காலங்களில் மட்டுமின்றி கோடை விடுமுறை காலங்களில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போன்று கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் டி.ஜி.புதூர் வழியாக கொடிவேரி அணையை சென்றடையும் வகையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளதால் இங்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அணையின் முன் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  இதனால் பெரும்பாலான வாகனங்கள் கொடிவேரி அணை பிரிவிலேயே நிறுத்திவிட்டு அணை வரை உள்ள இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போன்று அணையின் முன் பகுதியில் கடத்தூர் போலீசாரும், அணையின் உள் பகுதியில் பங்களாபுதூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் போதிய அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் குடிமகன்கள் சாலையோரம் உள்ள மரங்களின் அடியில் மது அருந்திவிட்டு அணைக்குள் செல்வதுடன் பெண்களிடம் தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 கொடிவேரி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.5 கட்டணம் வசூல் செய்யும் பொதுப்பணித்துறையினர், இதுபோன்ற காலங்களில் வாகன ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து வசதி செய்து தரவேண்டும். அதே போன்று அணையின் உள் பகுதியில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!