×

பைக்காரா நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி:  ஊட்டி அருகேயுள்ள பைக்காரா நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களை மட்டும் பார்ப்பது மட்டுமில்லாமல் நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, அப்பர்பவானி உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டி - கூடலூர் சாலையில் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளது. பைக்காரா அணை மின் உற்பத்திக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணை மின் உற்பத்திகாக திறந்து விடும் போது, அணையில் இருந்து வெளியேறும் நீர் பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்நிலையில் தற்போது குளு குளு காலநிலை நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அதிகரித்துள்ளது. அண்மையில் பெய்த மழை காரணமாக பைக்காரா அணையில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளது. மின் உற்பத்திக்காக பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!