×

முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது

வேளச்சேரி, அக்.1: அடையாறு சாஸ்திரி நகர், 7வது லேன் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மா. இவரது மகள் பானு (28). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  விமல்ராஜ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு  இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, பானு கடந்த ஒரு ஆண்டாக கணவர் விமல்ராஜை பிரிந்து, அதேபகுதியில் வசித்து வருகிறார்.  இதனிடையே, அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகனுடன், பானுவுக்கு நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  பானு தனது குழந்தை ஏஞ்சலுடன் ஜெகன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பானு கன்னியம்மாவுக்கு போன் செய்து குழந்தை ஏஞ்சலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

 இதையடுத்து, கன்னியம்மா  பானு வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்தார். அப்போது குழந்தை ஏஞ்சல் முகத்தில்  காயம், சூடு வைத்த தழும்பு  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து கன்னியம்மாவிடம் விசாரணை நடத்தினர்.   பானு தனது 2வது கணவர் ஜெகனுடன் சேர்ந்து அடித்து, சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்தியது தெரியவந்தது. பானு, ஜெகன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Sitravatham ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு