×

குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது

குன்றத்தூர், அக். 1: குன்றத்தூரில் சட்ட விரோதமாக காரில் குட்கா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3000 கிலோ குட்கா மூட்டைகள் மற்றும் 4 கார்களை பறிமுதல் செய்தனர். குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளுக்கு வாகனங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, போதைபொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் நேற்று தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் போலீசார் குன்றத்தூர் பிரதான சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

இதில், அந்த காரில் பயணிகள் அமரும் இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது‌. அதனைதொடர்ந்து காரில் வந்த கண்டிகையை சேர்ந்த சிராஜுதீன் (43), கூடுவாஞ்சேரியை சேர்ந்த மணிமாறன் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் அருகே உள்ள தனியார் குடோனில் குட்கா மொத்தமாக பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு குடோனை திறந்து பார்த்தபோது, அதில் ₹50 லட்சம் மதிப்புள்ள, சுமார் 3000 கிலோ குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அங்கு குட்கா கடத்தலுக்கு பயன்படுத்த நிறுத்தி வைத்திருந்த 3 வாகனம் உள்ளிட்ட 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Gutka ,Kunradthur ,
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது