×

மின்துறை தனியார் மயம் கண்டித்து மாநிலம் முழுவதும் 3வது நாளாக போராட்டம் நீடிப்பு

புதுச்சேரி, அக். 1: புதுச்சேரியில் மின்ஊழியர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மின்தடையை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலாப்பட்டு பகுதியில் நேற்று 4 இடங்களில் மறியல் நடந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கலுக்கு ஒன்றிய அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், இதை கண்டித்து மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கடந்த 28ம் தேதி தொடங்கிய இப்போராட்டம் நேற்று 3வது நாளாக நீடித்தது.

உப்பளத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள், டெக்னீசியன்கள் உள்பட 750க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன், சிறப்பு ஆலோசகர்கள் ராமசாமி, ராசேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொறியாளர்கள் சங்கம் தணிகாசலம், தணிகைவேலன், அச்சுதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற மின்துறை ஊழியர்கள் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியபடி அமர்ந்திருந்தனர். மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், அதிகாரிகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.மின்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வீடுகளில் மின்அளவு கணக்கீடு, மின் கட்டணம் வசூல், மின்விநியோக பராமரிப்பு பணிகள் தொடர்ந்து முடங்கியுள்ளன.

இதனிடையே நேற்றும் ஆங்காங்கே மின்வெட்டு பிரச்னை நீடித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதியில் காலை 6 மணி முதல் மின்சாரம் இல்லாததை கண்டித்தும், கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு காரணமாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென ஜெயா தியேட்டர் அருகே உள்ள ஈசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதேபோன்று பெரிய காலாப்பட்டு பேருந்து நிறுத்தம் மற்றும் கனக செட்டிகுளம் பேருந்து நிறுத்தம், சின்ன காலாப்பட்டு பேருந்து நிறுத்தம் ஆகிய நான்கு இடங்களில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இதனால் சுமார் 5 மணி நேரம் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப் - இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள், மின்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் எங்களிடம் நேரில் வந்து பேச்சு பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என கூறினர். இதன்பின் மின்சாரம் வழங்கப்பட்ட பிறகு சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.இதேபோல கோரிமேடு காமராஜர் நகர் பகுதியில் நேற்று காலை முதலே மின்வெட்டு நிலவியதால் அப்பகுதி மக்கள் மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி எதிரே திண்டிவனம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அங்கிருந்து கலைந்துபோக செய்தனர். மேலும் கருவடிக்குப்பம், லாஸ்பேட்டை, சாரம், வில்லியனூர் பத்துக்கண்ணு, சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு