கடலூர், அக். 1: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981ன்படி, சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, ஆணையர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு 2ம் தேதி (நாளை) காந்தி ஜெயந்தி மற்றும் 9ம் தேதி மிலாடி நபி ஆகியவற்றை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் எப்எல் 2 மற்றும் எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற மதுபான அரசு பார்கள் மேற்படி தினத்தில் மூடப்பட்டிருக்க வேண்டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகியவற்றை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களும் அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து எப்எல் 3 ஓட்டல், பார்கள் ஆகிய இடங்களிலும் மது விற்பனை செய்யாமல் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பெயரிலும், எப்எல் 3 பார் உரிமையாளர்கள் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.