×

ராக்கெட் இயந்திரம், உதிரிபாகங்களை நாமே தயாரித்து வருகிறோம் இந்திய ராணுவ அறிவியல் ஆலோசகர் பெருமிதம் வேலூர் விஐடியில் ‘கிராவிடாஸ் 2022’ தொடங்கியது

வேலூர், அக்.1: விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான ராக்கெட் இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை நாமே தயாரித்து வருகிறோம். என்று வேலூர் விஐடி கிராவிடாஸ் 2022 அறிவுசார் தொழில்நுட்பம் 3 நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், இந்திய ராணுவ அறிவியல் ஆலோசகர் கூறினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் 2022 தொழில்நுட்ப திருவிழா நேற்று தொடங்கியது. நாளை வரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவுக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன், பெங்களூரு ஆட்டோ டயர்ஸ் நிறுவன ஆசிரியர்களின் கல்வித்துறை தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஸ்னைடர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவன உதவி தலைவர் சித்ரா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ அறிவியல் ஆலோசகர் சதீஷ்ரெட்டி கலந்துகொண்டு பேசியதாவது: விஐடி கிராவிடாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தான் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரமுடியும். இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் 5 அல்லது 6 இன்ஜினியரிங் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இவற்றின் மூலம் சில ஆயிரம் இன்ஜினியர்கள் மட்டுமே உருவாகி வந்தனர். ஆனால் தற்போது ஓராண்டுக்கு 16 லட்சம் இன்ஜினியர்கள் படித்து முடித்துவிட்டு வருகின்றனர். அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்க அரசு பங்களிப்பு வழங்கி வருகிறது.

இதற்கு முன்பு வரை ஐஐடியில் படித்து முடித்த இன்ஜினியர்கள் வெளிநாடுகளில் அங்கேயே செட்டிலாகி வந்தனர். ஆனால் தற்போது 75 சதவீத இன்ஜினியர்கள் இந்தியாவிலே பணிபுரிகிறார்கள். இன்ஜினியர்கள் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கேயே சுயதொழில்களும் செய்கின்றனர். கடந்த 2016ல் தொழில் முனைவோர் மூலம் இந்தியாவில் 421 சுய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டில் 75 ஆயிரம் சுயதொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இதற்கு முன்பு வரை நாட்டின் தேவைகளுக்காக அனைத்தையும் இறக்குமதி செய்துகொண்டிருந்தோம். ஆனால் தற்போது நமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து வருகிறோம்.
உலகிலேயே நீண்ட தூரம் சுடும் திறன்கொண்ட 155 எம்எம் அளவுள்ள துப்பாக்கிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிகள் நடப்பாண்டில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான ராக்கெட் இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை நாமே தயாரித்து வருகிறோம். இதில் இளம் இன்ஜினியர்களின் பங்கு அதிகமாக உள்ளது. மாணவர்கள் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

சைபர் தொழில்துறை உற்பத்தி தற்போது 17 சதவீதமாக உள்ளது. இதனை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இளம் இன்ஜினியர்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ராணுவ தொழில்நுட்ப நிதி இதற்கு முன்பு வரை ₹10 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ₹50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய சிந்தனைகள் மூலம் உலகில் முதல் முறையான பதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். இது போன்ற வாய்ப்புகளை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். விஐடி கிராவிடாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10ஆயிரம் மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 13 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 150 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கிராவிடாஸ் நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிராவிடாஸ் தொழில்நுட்ப திருவிழா 2வது நாளாக இன்றும் நடக்கிறது. நாளை நிறைவு விழா நடக்கிறது.

Tags : VIT Vellore Indian Army ,Perumitham ,
× RELATED சிறுவளூரில் மாணவர் சேர்க்கை பேரணி...