தூத்துக்குடி, அக். 1:தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த கோவில்பட்டி சத்யா இருந்து வந்தார். இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் பலரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதனால் மாவட்ட பஞ்சாயத்தில் அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து திமுக பலம் அதிகமானது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பான மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம், கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவிற்கு எதிராகவே 15 மாவட்ட கவுன்சிலர்கள் வாக்களித்தனர். தலைவர் சத்யாவும், அவருக்கு ஆதரவான உறுப்பினர் ஒருவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவிற்கு எதிரான தீர்மானம் உறுதி செய்யப்பட்டதால் அவர் தலைவர் பதவியை இழந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடம் காலியாக இருப்பதாக அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர் மனைவியான திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.