×

மருத்துவத்திற்கு பயன்படுத்த, மதிப்பு கூட்டி பொருட்கள் தயாரிக்க வெற்றிலையை காப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும்: கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை

திருப்புவனம், அக். 1: திருப்புவனம் பகுடியில் விளையும் வெற்றிலையை மதிப்பு கூட்டி பொருட்கள் தயாரிக்க, மருத்துவத்திற்கு பயன்படுத்த வெற்றிலையை காப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும் என கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம், புதூர், கோட்டை, நெல்முடிக்கரை, கலியாந்தூர், வெள்ளக்கரை, நயினார்பேட்டை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கொடிக்கால் சாகுபடி நடைபெற்று வருகிறது. நாட்டு வெற்றிலை, கற்பூரம், சிறுகாமணி போன்ற வெற்றிலை ரகங்கள் பயிரிடப்படுகிறது. வெற்றிலை விவசாயத்தை 5 முதல் 10 பேர் கொண்ட விவசாயிகள் இரண்டு ஏக்கர் நிலத்தை குழுவாக இணைந்து பல கண்ணிகளாகப் பிரித்து அமைத்துக் கொண்டு சாகுபடி செய்கின்றனர்.

வெற்றிலைக் கொடி அகத்திக் காலில் தான் படரும். அகத்தி விதை நடவு செய்து மூன்று மாதங்கள் கழித்து குச்சியாக தழைத்த பிறகு வெற்றிலை கொடியை நடவு செய்கின்றனர். இதனை கொடி அடிப்பது என்கின்றனர். வெற்றிலைக் கொடி அகத்திக் காலில் படருவதையே கொடிக்கால் விவசாயம் என்கின்றனர். கொடி அடித்த பிறகு ஒரு வருடம் கழித்து வாரத்திற்கு ஒரு முறை வெற்றிலை பறித்து விற்பனை செய்கின்றனர். வெற்றிலை விவசாயத்திற்காக ஏக்கருக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை செலவு செய்கின்றனர். தினசரி ஒரு ஏக்கருக்கு ஒரு முறை பத்து கிலோ வரை பறிக்கலாம், பெரும்பாலும் ஜனவரி, பிப்ரவரி முகூர்த்த நாட்களை கணக்கிட்டு வெற்றிலை பயிரிடுகின்றனர்.

புதூர், நெல்முடிகரை பகுதிகளில் சுமார் 100 ஏக்கர்களில் வெற்றிலை கொடிக்கால் சாகுபடி நடக்கிறது. சுமார் 500 குடும்பத்தினர் இந்த கொடிக்கால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்புவனம் பகுதிகளில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி 4 முதல் 7 ஆயிரம் கிலோ வெற்றிலை வரை அனுப்பபடும். ஜனவரி, பிப்ரவரி முகூர்த்த நாட்களில் ஒரு கிலோ 200 ரூபாய் வரை விலை போகும். மற்ற பயிர்களுக்கு காப்பீடு திட்டம் உள்ள நிலையில் வெற்றிலைக்கு காப்பீடு கிடையாது என தோட்டக்கலை துறை அலுவலர்கள் கூறுகின்றனர். காப்பீட்டு நிறுவனங்களும் தமிழக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை வெற்றிலைப்பயிரை காப்பீடு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெற்றிலைக் கொடிகால் விவசாயி செல்வம் கூறுகையில், ‘‘வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். கடந்த நூறாண்டுகளுக்கு மேல் திருபுவனம் பகுதியில் வெற்றிலை விவசாயம் செய்து வருகிறோம். வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணஙகள் உள்ளன.பசியைத் தூண்டும், செரிமானம்,சளி, இருமல்,ஆஸ்துமா, நுரையீரல் அலர்ஜி போன்ற நோய்களுக்கு குணமளிக்கும்சிறந்த மூலிகை வெற்றிலை. இதில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் சி, போன்றவற்றுடன் வீரியமிக்க நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ‘சவிக்கால்’ என்னும் மருந்தும் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கும்பகோணம், சோழவந்தான் வெற்றிலையை போலவே திருப்புவனம் வெற்றிலையும் மிகவும் பிரபலமானது. வெற்றிலை விவசாயத்தில் காற்றடித்தாலும் மழை பெய்தாலும், பனி பொழிந்தாலும் விளைச்சல் பாதிக்கும் பயிர். இதற்கு காப்பீடு கிடையாது.

இயற்கை பேரிடரால் நஷ்டம் ஏற்பட்டால் விவசாயிகளின் தலையில் விழுந்ததுதான். தற்போது வெற்றிலையை மதிப்புல் கூட்டி பொடியாக்கி மருத்துவத்திற்கு பயன் படுத்தி வருகின்றனர்.
அந்த பொடிக்கு மலேசியா மற்ற பல்வேறு நாடுகளில் கிராக்கி உள்ளது. திருப்புவனம் பகுதியில் வெற்றிலை விவசாயிகளை ஒருங்கிணைத்து மதிப்புக்கூட்டி பொருட்கள் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறையினர் உதவி செய்யவேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு