காரைக்குடி, அக்.1: காரைக்குடி அருகே கல்லல் அ.சிறுவயல் பகுதியில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா தலைமை வகித்து பேசுகையில், தேனீக்கள் அயல்மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. இதனால் விளைச்சல் 25 முதல் 35 சதவீதம் கூடுதலாக கிடைக்கும். தென்னையில் விளைச்சலை அதிகப்படுத்த தேனீவளர்ப்பு செய்தல் அதிக லாபத்தை ஈட்டிதரும். அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே தேனீ பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியும். தேனீ பண்ணை அமைக்க தேர்வு செய்யும் இடம் தேனீக்களுக்கும், தேனீ வளர்ப்போருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
புழு அறையில் உள்ள தேன் அடைகளில் இருந்து தேனை எடுக்க கூடாது. தேனீக்கு தேவையான உணவு இருப்பு வைத்து விட்டு தேன் எடுக்க வேண்டும். காலை வேளையில் தேனடைகளை சுத்தம் செய்வது நல்லது என்றார். வேளாண் அலுவலர் பாலகணபதி, கலைஞர் திட்ட பொறுப்பு அலுவலர் காளீஸ்வரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் குருதாஸ் செயல்முறை விளக்கம் அளித்தார்.