×

(வேலூர்) அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு கொலையா? போலீசார் விசாரணை ஒடுகத்தூர் அருகே காட்டு பகுதியில்

ஒடுகத்தூர், செப்.30: ஒடுகத்தூர் அருகே காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலத்தை மீட்ட போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியில் அடர்ந்த காடு உள்ளது. இந்த காட்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை கடும் துர்நாற்றம் வீசுவதாக, அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் விஏஓ நந்திவர்மனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விஏஓ அளித்த தகவலின்பேரில், வேப்பங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், துர்நாற்றம் வீசும் பகுதிக்கு சென்று பார்த்தபோது அடர்ந்த முட்புதர் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் முதியவர் சடலம் கிடந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்று தெரியவில்லை.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, முதியவரை யாரேனும் அடித்து கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டு சென்றார்களா? அல்லது அவரே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் கூறுகையில், கரடிகுடி காட்டு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர், இறந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். இறந்தவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை. இதேபோல், ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி சாலையில் நேற்று முன்தினம் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். அவரும் யார் என்று தெரியவில்லை. எனவே, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சித்தூர் மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம்' என்றனர்.

Tags : Vellore ,Odugathur ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...