ஊட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை

ஊட்டி, செப். 30:ஊட்டி அருகே பர்ன்ஹில் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. பொறியாளர். இவர், தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் பர்ன்ஹில் பகுதியில் வசித்து வருகிறார். இவரது  மகன் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி நாச்சிமுத்து வீட்டின் அருகில் இருந்த ஒரு வீட்டில் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை போனது. இதனால் பதறிப்போன நாச்சிமுத்து தனது வீட்டிலும் சோதனை செய்தார். அப்போது அவரது வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாச்சிமுத்து மற்றும் அக்கம்பக்கத்தினர் ஊட்டி பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை நாச்சிமுத்துவின் மனைவி வீட்டின் முன்பு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வீட்டில் முன்பு ஒரு பார்சல் கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் 3 பவுன் நகை மட்டும் இருந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பர்ன்ஹில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்று பயந்த கொள்ளையர்கள், வீட்டின் முன்பு நகையை போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: