×

விவசாயத்திற்கு தேவையான உரம் கையிருப்பு உள்ளது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தகவல்

விருதுநகர், செப். 30: விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான உரம் போதிய அளவு கையிருப்பு உள்ளது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார். கூட்டத்தில், ‘நடப்பு நிதியாண்டில் ராபி பருவத்திற்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில், விவசாயிகள் பயிர்க் காப்பீடு மற்றும் மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், 186 கிராம ஊராட்சிகளில் 148 தொகுப்புகளில், 1953 ஹெக்டேரில் உலர்களங்கள், சேமிப்பு கிட்டங்கிகள், கிணறு தோண்டுதல், ஆழ்துளை கிணறு அமைத்தல், மரக்கன்று நடுதல், தடுப்பணை அமைத்தல், பண்ணைக் குட்டைகள் ஆகிய பணிகளுக்கான இலக்கு பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பகுதி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பங்கள் சமர்ப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டது.
விவசாயிகள் கோரிக்கை ஏற்று கான்சாபுரத்தில் நேரடி கொள்முதல் பணி துவக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

சிவகங்கை சக்தி சுகர்ஸ் மற்றும் தேனி ராஜ சுகர்ஸ்க்கு பதிவு செய்து அறுவடை செய்யப்பட்ட கரும்புகளுக்கு கிரைய தொகை முழுமையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நடப்பு பருவத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளைஅரவைக்கு பதிவு செய்து கொள்ளலாம். மாவட்டத்தில் விவசாய பணிகள் தொடங்க உள்ள நிலையில், இம்மாதத்திற்கு தேவையான உரம் 2,610 மெ.டன், கூட்டுறவு நிறுவனங்களில் 2,230 மெ.டன் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் 2,932 மெ.டன் என 5,162 மெ.டன் உரங்கள் இருப்பில் உள்ளது. மக்காச்சோளம் மற்றும் காய்கறி விதைகள் இருப்பில் இருப்பதால் விவசாயிகள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ‘கரும்பு விவசாயிகள் 245 பேருக்கு கரும்பு சப்ளை நிலுவைத்தொகை இருப்பதாகவும், சாத்தூர் படந்தால் பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.900 வரை விவசாயிகளிடம் தனியார் நிறுவனம் வசூலிப்பதால், வேளாண்துறை சார்பில், இலவசமாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் வேலி கருவேல் மர ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். கூட்டத்தில் டிஆர்ஓ ரவிகுமார், வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு