×

நடப்பாண்டில் கல்விக்கு ரூ.36,000 கோடி ஒதுக்கீடு

கந்தர்வகோட்டை, செப்.29: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லாக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, தச்சன்குறிச்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 869 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் தலைவர் கவிதா ராமு தலைமையில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், பள்ளி குழந்தைகள் பயன்பெற விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடை ,பேருந்து பயண அட்டை என வழங்கி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பசுமை திட்டத்தின் கீழ் தேர்வு செய்து 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சோலார் மூலம் மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம், விடுமுறை நாட்களில் தனியாருக்கு மின்சாரம் விற்பனை செய்யலாம். தமிழக முதல்வர் பொறுப்பேற்று 15 மாதங்களில் பள்ளிக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். இதில் காலை சிற்றுண்டி சிறந்த பயனுள்ள திட்டமாதும். நடப்பாண்டில் கல்விக்கு நமது முதல்வர் 36,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் கபடி போட்டிக்கு தேர்வு செய்துள்ளது அறிந்து மாணவிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை, ஆர்டிஓ முனைவர் முருகேசன், மாவட்ட ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர் பரமசிவம், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின் நாராயணசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் திலகவதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஜானகிராமன், தாசில்தார் ராஜேஸ்வரி, மட்டாங்கால் ஊராட்சி தலைவர் செல்லபிள்ளை, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பழனிவேல், ஷப்னம், அடைக்கப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...