மன்னார்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து சேதப்படுத்திய 4 பேர் கைது

மன்னார்குடி, செப்.29: மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டை தெற்கு தெருவில் மாயக்காத்தான் சாம்பான் சாமி கோயில் உள்ளது. கருணாகரன் என்பவர் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில், அக்கோயிலில் உண்டியல் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக கிராமத்தில் பலமுறை சமாதான நடவடிக்கைகள் மேற்கொண்டும் பலனில்லை. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கோயில் முன்பு ஒரு சிறு மண்டபத்தை அமைத்து அதில் உண்டியலை வைத்தனர். இது மற்றொரு தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த உண்டியலும், மண்டபமும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் பூசாரி கருணாகரன் மன்னார்குடி நகர காவல் நிலையத் தில் கொடுத்த புகாரின் பேரில் நான்கு நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நான்கு நபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர். ஆனால், மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜராகி ஜாமீன் பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு நபர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட எஸ்பி சுரேஷ் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து மன்னார்குடி டிஎஸ்பி பாலச்சந்தர் அறிவுறுத்தலின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அறிவு (எ) அறிவழகன் (36), பார்த்தீபன் (45), வீரமணி (47) , பிரபு (42) ஆகிய நான்கு நபர்களையும் நேற்று கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: