உடன்குடி,செப்.29: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 2ம் நாள் விழாவில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 26ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வேடமணிய திருக்காப்பு அணிந்து வருகின்றனர். இரண்டாம் திருநாளான 27ம் தேதி இரவு 10மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.