தண்டராம்பட்டு, செப்.29: தண்டராம்பட்டு அடுத்த பள்ளம்மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன். இவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி மனைவி வரலட்சுமி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். ரகுவரன் தானிப்பாடியில் சிமெண்ட் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். வரலட்சுமி வளையல் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வீட்டை பூட்டி கொண்டு ரகுவரன் வேலைக்கு சென்றுவிட்டார். வரலட்சுமி வளையல் வியாபாரத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்கம் செயின், 450 கிராம் வெள்ளி அரைஞான் கயிறு, கால் கொலுசு திருட்டு போயுள்ளது தெரியவந்தது.
உடனடியாக தனது கணவருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தார். வீட்டுக்கு வந்து பார்த்த ரகுவரன் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் எஸ்ஐ மஞ்சுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதேபோன்று போந்தை கிராமத்தைச் சேர்ந்த தனக்கோட்டி (55), மனைவி வள்ளி (53). இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று தனகோட்டி மனைவி வள்ளி வீட்டைப் பூட்டிக்கொண்டு தானிப்பாடி வேலை காரணமாக சென்றுவிட்டனர். பின்னர் நேற்று மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 300 கிராம் வெள்ளிப் பொருட்களை திருட்டு போனது தெரியவந்தது. அந்தநேரத்தில் வீட்டின் பக்கத்தில் ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தை வைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தார். வௌியே வள்ளி வந்து பார்த்தும் அவர் தப்பிச்சென்றார். இதுகுறித்து தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.