நெல்லை, செப். 29: நெல்லையில் புஷ்பலதா கல்விக் குழுமம் சார்பில் ரூ.7.65 லட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட புதிய பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்து பார்வையிட்டார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பழைய செஞ்சிலுவை சங்க கட்டிட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளித் திறனுடைய குழந்தைகள் விளையாடுவதற்காக புதிய பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாவட்டத்தின் நிர்வாகத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதார வள மையம் பாளையங்கோட்டையில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மன வளர்ச்சி குன்றியோருக்கு 0-6 வயதுக்குட்பட்டோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம், ரெடிங்டன் பவுண்டேசன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வழங்குவதற்கான கணினி பயிற்சி மற்றும் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.