மேலூர், செப். 29: மேலூரில் புதிதாக நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு உள்ளதால், பழைய உரக் கிடங்கிலேயே இதனையும் செயல் படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று கூடியது. நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மேலூர் நகரில் உள்ள புல் பண்ணையில், ரூ.50 லட்சம் செலவில் புதிய நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அங்கு பணியை துவக்கிய போது, அருகில் பள்ளி உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மலம்பட்டியில் உள்ள பழைய உரக்கிடங்கிலேயே, இந்த நுண்ணுயிர் உரக்கிடங்கு பணிகளை மேற்கொள்ளவும், ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற அதே நிறுவனம், அந்த இடத்தில் பணி செய்ய ஒப்புக் கொண்டதாகவும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மொத்தம் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.