சேலம், செப். 29: சேலம் மாநகர பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை குறித்து, குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்த, தமிழக முதல்வரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் உமாராணி பேசுகையில், ‘‘வரட்டாறு ஓடையில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு மழைநீர் மட்டுமின்றி, பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஓடையில் வீசப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. பல இடங்களில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடைகளை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும்,’’ என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் (அதிமுக) யாதவமூர்த்தி பேசுகையில், ‘‘மாநகராட்சியில் ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ளது. ஆனால் குடிநீர் திட்டங்களை விரிவுப்படுத்த ₹416 கோடி வழங்கப்படும் என தீர்மானத்தில் உள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கும், எப்படி செயல்படுத்த போகிறீர்கள், மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும். அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது,’’ என்றார். இதற்கு மாநகராட்சி பொறியாளர் ரவி விளக்கம் அளித்து பேசுகையில், `‘தனியார் பங்களிப்பு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சி நிதியில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படாது. அதேபோல், பொதுமக்களிடம் வசூல் செய்ய மாட்டோம்,’’ என்றார்.