கண்டாச்சிபுரம், செப். 29: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே அரசு பேருந்தின் பின்னால் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து நேற்று காலை அரசு பேருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் பெங்களூரில் இருந்து டைல்ஸ் ஏற்றி வந்த லாரி புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஒதியத்தூர் பேருந்து நிலையம் வந்ததும் அரசு பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் பின் பகுதி கண்ணாடி முழுவதும் உடைந்தது. மேலும் லாரி மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர், பயணிகள் என மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கண்டாச்சிபுரம் போலீசார் லாரி மற்றும் அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.