விருத்தாசலம், செப். 29:கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் பிஎப்ஐக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். இதில் பிஎப்ஐ நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பி.எப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை, துணை அமைப்புகளுக்கும் தடை பொருந்தும் என ஒன்றிய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.இதன் அடிப்படையில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இணையும் பகுதியான மங்கலம்பேட்டை பில்லூர் ரோடு சோதனைச் சாவடி பகுதியில் மங்கலம்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் மங்கலம்பேட்டை பகுதியில் உள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, எங்கிருந்து வாகனங்கள் வருகிறது, எங்கே செல்கிறது என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்து மங்கலம்பேட்டை நகரத்திற்குள் அனுப்பினர். மேலும் சந்தேகப்படும்படியாக வரும் இருசக்கர வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்த பின்னர் அனுமதித்தனர். விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் முருகேசன், மங்கலம்பேட்டை விஜயகுமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.