கடலூர், செப். 29: கடலூர் மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் என பொதுமக்களை பாதிப்படைய செய்துள்ள நிலையில், அதனை தடுக்கும் நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார பணிகள் மற்றும் வார்டுகள் முழுவதும் தீவிர கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொள்ளும் வகையில் ராட்சத இயந்திரங்கள் புதிதாக வாங்கப்பட்டு கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக இயந்திரங்கள் பெறப்பட்டு, கொசு மருந்து அடிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, அனைத்து வார்டு பகுதிகளுக்கும் கொசு மருந்து அடிக்கும் பணியையும், வடிகால் வாய்க்கால் பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு தொடங்கி வைத்தார். மாநகர ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார். நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, மாநகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.