×

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஏரல், செப். 28: ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா, 26ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை தாமிரபரணி நதியில் இருந்து காளி அம்மன் கொடியுடன் ஏரல் நகர் வீதிகளிலும், சிறுத்தொண்டநல்லூர் வீதிகளிலும் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணிக்கு கோயில் வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்வான தசரா திருவிழா, அக்.5 மற்றும் 6ம் தேதி நடக்கிறது. 5ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறுத்தொண்டநல்லுர் ஊரில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி காலை 7 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் ஏரல் நட்டார் அம்மன் கோயில் வந்து சேருதல், 8 மணிக்கு ஏரல் நட்டார் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, 9 மணிக்கு அம்மன் ஏரல் நகர் வீதி உலா வரும் நிகழ்ச்சி, 10 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் வந்து சேருதல், தாகசாந்தி மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

தொடர்ந்து காலை 11 மணிக்கு ஏரல் பஜார் வழியாக அம்மன் கடைத்தெருவில் உலா வருதல், பகல் 12 மணிக்கு ஏரல் சேனையர் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, மதியம் 2 மணிக்கு அம்மன் ஏரல் பேட்டை பந்தலில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை அம்மனுக்கு நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஏரல் நகர் உலா புறப்பட்டு 7ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நகர் உலா வெளியே சென்ற அம்மன் சிறுத்தொண்டநல்லூர் கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Dussehra festival ,Siruthondanallur Muthumalai Amman Temple ,
× RELATED தசரா விழா எதிரொலி: திண்டுக்கல்...