சிதம்பரம், செப். 28: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 2005ம் ஆண்டு முன் ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 22ம் தேதி முதல் 17 நாட்கள் நகை சரிபார்ப்பு ஆய்வு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று 18வது நாளாக நகை சரி பார்ப்பு ஆய்வு பணி நடந்தது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் 2021ம் ஆண்டு வரை கோயிலுக்கு வரப்பெற்ற நகைகள் குறித்து ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் 2022ம் ஆண்டு கணக்குகள் சரி பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆய்வு பணி 28ம் தேதி முடிக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.