திருப்பூர், செப். 28: தமிழகத்தில் 30 லட்சத்திற்கும் மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் குறவர்களை பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரன் தலைமை தாங்கி பேசினார். இதில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சந்திரசேகரன், வீரநம்பி குறிஞ்சியர் பேரவை மாநில தலைவர் சிவக்குமார், குறிஞ்சியர் சமூக நீதி பேரவை மாநில பொதுச்செயலாளர் துரைசாமி பெருமாள், தேசிய குறிஞ்சியர் சமூக நீதி பேரவை மாநில நிறுவன தலைவர் ஜெகநாதன், கருஞ்சிறுத்தை கட்சி மாநில தலைவர் கேப்டன் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.