திருப்பூர் மாவட்டத்தில் 77 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் மூலம் 1429 மாணவ-மாணவிகள் பயன் மேலும் பல பள்ளிகளில் தொடங்க பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர், செப். 28: திருப்பூர் மாவட்டத்தில் 77 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 1429 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். மேலும், பல வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை கடந்த 15-ம் தேதி மதுரையில் உள்ள பள்ளிகளில் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் மாநில அரசின் முழுமையான நிதியைக் கொண்டு, காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி முதல் கட்டமாக வழங்கப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவு வகைகள் திங்கள் முதல் வெள்ளிவரை சுழற்சி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு, காலை சிற்றுண்டித் தயார் செய்யப்பட்டு வழங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 77 மையங்களில் உள்ள 77 அரசு தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக புது ய்யப்பநாயக்கன்பாளையம், தும்பலப்பட்டி மற்றும் நந்தவனம்பாளையம் ஆகிய 3 அரசு தொடக்கப்பள்ளிகளில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் இந்த திட்டத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள என்.காஞ்சிபுரம் மற்றும் ஜோதியம்பட்டி பள்ளிகளில் தொடங்கிவைத்தனர். இந்த திட்டத்தின் மூலம் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் 77 பள்ளிகளை சேர்ந்த 1429 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றன. இதற்கிடையே இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏழை, எளிய பொதுமக்கள் பலரும் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பிவைத்து வருகிறார்கள். கல்வி இடைநிற்றல் என்பதை இந்த திட்டம் தடுத்துள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்தை மேலும் பல பள்ளிகளில் தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறியதாவது: தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டம் வரவேற்கத்தக்கது. சிறப்பான திட்டம் ஆகும். முதற்கட்டமாக இந்த திட்டம் குண்டடம் வட்டாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 77 பள்ளிகளில் தற்போது செயல்பாட்டில் உள்ளது. ஆனால் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற தொழிலாளர்கள் பலரும் பயனடையும் வகையில், இந்த திட்டத்தை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக அவினாசி, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பனியன் நிறுவன தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவர்களது குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:  திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் வட்டாரத்தில் முதலாக 77 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, அந்த பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 77 பள்ளிகளுக்கு தான் அனுமதி கிடைத்துள்ளது. மேலும், கூடுதலாக பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு முடிவு செய்தால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மற்ற பகுதிகளிலும் இந்த திட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு தான் முடிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: