திருவாரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

திருவாரூர்: செப்.28: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகப்படியாக நன்னிலத்தில் 111.8 மி.மீ பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் என்பது கடந்த 5 மாத காலமாக சுட்டெரித்து வருகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 90 டிகிரி முதல் 100 டிகிரி வரையில் வெயில் அடித்து வந்த நிலையில் இதேபோன்று திருவாரூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 90 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் மற்றும் தொழிலாளர்கள் போன்றவர்கள் இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 25ந் தேதி நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் மன்னார்குடி பகுதியில் இடி, மின்னலுக்கு தந்தை மற்றும் மகன் பலியாகினர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவும் அதே 2 மணி அளவில் துவங்கிய மழையானது 4 மணி வரையில் இடி மின்னலுடன் கனமழையாக பெய்தது.

இதன் காரணமாகவும் திருவாரூர் உட்பட மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் குளம் போல் தேங்கியது. மேலும் தற்போது கதிர்வந்த நிலையில் இருந்து வரும் முன்பட்ட குறுவை பயிர்கள் மற்றும் அறுவடை நடைபெற்று வரும் பருத்தி பயிர்களுக்கு இந்த மழையானது பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருந்து வருகின்றனர். நேற்று காலை 6 மணி வரையில் பெய்த மழையளவு மி.மீ வருமாறு, திருவாரூர் 70.3, மன்னார்குடி 20.1, நன்னிலம் 111.8, குடவாசல் 31.4, வலங்கைமான் 19.6, நீடாமங்கலம் 20.4, பாண்டவையாறு தலைப்பு 23.8, முத்துப்பேட்டை 2.6 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 300 மி.மீ மழையும், சராசரியாக 33.33 மி.மீ மழையும் பதிவாகியது.

Related Stories: