×

கணவனின் போதை பழக்கத்தால் விஷம் குடித்து மனைவி பலி:குழந்தை சீரியஸ்

பொன்னேரி, செப்.28: பொன்னேரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் மது போதைக்கு அடிமையாகி, அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், மனமுடைந்த மனைவி மற்றும் குழந்தையுடன் விஷம் குடித்ததில், தாய் பரிதாபமா இறந்தார். 11 மாத குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் நவீன்குமார் (30). பஞ்சத்தியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே தெருவில் வசிக்கும் செல்வம் மகள் சிவசங்கரி (24). இவர்கள், இருவரும் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருமணம் செய்து கொண்டு, அதே பகுதியில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு சர்வின் குமார் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. நவீன்குமார் மது போதைக்கு அடிமையாகி, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், பொன்னேரி அருகே உள்ள ஆர்.ஆர் திருமண மண்டபம் அருகில் தம்பதி வாடகை வீட்டில்  வசித்து வந்தனர். அங்கும், நவீன்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனையுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், கடந்த 21ம் தேதி மனமுடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை தானும் குடித்துவிட்டு, குழந்தைக்கும் குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தாயும், குழந்தையையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சிவசங்கரி பாரிதாபமாக பலியானார். 11 மாத ஆண் குழந்தை தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் பொன்னேரி ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணியம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...