நெல்லை, செப். 27: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி அமலாக்க அலுவலர், மத்திய புலனாய்வு உதவி ஆய்வாளர், பிரிவு எழுத்தர், வரி உதவியாளர் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் பணிக் காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பணிகளுக்கான அறிவிப்பு கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் மாதம் டிசம்பர் 2022 ஆகும். இந்தத் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.10.2022. மேலும்கூடுதல் விவரங்களை ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தப் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதற்கான வகுப்புகள் நேற்று (26ம் தேதி) திங்கள் கிழமை தொடங்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் நகலுடன் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.