×

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன் திருநங்கைகள் சாலை மறியல்

கடலூர், செப். 27: வீட்டுமனைப்பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்க கோரி, கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் சிலர், நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருநங்கைகள் கூறுகையில், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினர். மேலும் இதுகுறித்து பலமுறை ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமும் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினர்.

 இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியும், அவர்கள் கலைந்து செல்லாமல், தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கைகள் குறித்த கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த, கடலூர் புதுநகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றார். இதையடுத்து திருநங்கைகள் தங்கள் கோரிக்கைகளை, மனுவாக எழுதி, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை