குளச்சல், செப்.27 : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை தாம்பரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (55) என்பவரது வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் மற்றும் போலீசார் விரைந்தனர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் சென்றும் சோதனை செய்தனர். கல்யாண சுந்தரத்தில் வீட்டில் உள்ள ஒரே ஒரு கேமராவில் குண்டு வீசி விட்டு தப்பும் வாலிபர் உருவம் பதிவாகி உள்ளது. மொத்தம் 2 பேர் வந்துள்ளனர். ஒருவர் பைக்கில் தயாராக இருக்க மற்றொருவர் குண்டு வீசி விட்டு தப்பி செல்கிறார்.