இன்று துவக்கம் கரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூர், செப். 27: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். இந்த கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 335 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 38 மனுக்கள் பெறப்பட்டது. மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 6 நபர்களுக்கு சிறுதொழில் தொடங்கிட ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவிகளும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2280 மதிப்பிலான உதவி உபகரணங்களையும், 1 பயனாளிக்கு மின்னணு குடும்ப அட்டை நகலையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் மந்திராச்சலம், நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, உதவி ஆணையர்(கலால்) பாலசுப்ரமணியன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: