விமான பயணம் முன்னறிவிப்பின்றி ரத்து வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

அரியலூர், செப். 27: சென்னையிலிருந்து அந்தமானுக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த 27 பயணிகளின் பயணத்தை முன்னறிப்பின்றி ரத்து செய்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,11,000 இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த விஜயசாரதி(67), வரதராஜுலு(66), விஸ்வாசகுமார்(63), சுப்பிரமணி(67), அகசம்(62), சேலம் இளங்கோவன்(63), மணிவண்ணன்(61), விருத்தாச்சலம் கோவிந்தசாமி(64), புதுச்சேரி மேகர் அலி(65) ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன், கடந்த 2015ம் ஆண்டு சென்னையிலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா சென்றுவர சென்னையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், பயண கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, பயணச்சீட்டு பெற மேற்கண்ட நபர்கள் சென்றபோது, பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டது என தெரியவந்தது. இதையடுத்து, வேறு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் சொந்த செலவில் ரூ.1,86,000 கூடுதலாக செலுத்தி பயணச்சீட்டு பெற்று சுற்றுலா சென்று வந்தனர். பின்னர், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் சென்று முன்பணத்தை கேட்டபோது, உரிய பதில் இல்லாததால், கடந்த 2017ம் ஆண்டு சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரணை மேற்கொண்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி ராம்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா அடங்கிய குழுவினர், தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மேற்கண்ட 9 நபர்களுக்கும் மொத்தமாக ரூ.12,11,000த்தை நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: