கும்பகோணம் அருகே குடிநீர் கேட்டு சாலைமறியல்

கும்பகோணம், செப்.27: கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் 31 முதல் 35 வார்டு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குடிநீரை முறையாக விநியோகம் செய்ய வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் பத்ம.குமரேசன் தலைமையில் நேற்று காலை கும்பகோணம் தஞ்சை சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கும்பகோணம் -தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 3 நாட்களுக்குள் குடிநீர் முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.

Related Stories: