முத்துப்பேட்டை,செப்.27: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக நடமாடும் கேமரா வாகனம் மூலம் முத்துப்பேட்டை பகுதியில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு உட்பட பல இடங்களில் அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் சில தினங்களாக நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டது. இதில் திருவாரூர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோன்று முத்துப்பேட்டை நகர் எல்லையான பட்டுக்கோட்டை சாலையில் செம்படவன்காடு பைபாசிலும், திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலங்காடு பைபாசிலும், மன்னார்குடி சாலையில் கோவிலூர் பைபாசிலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து நகர் பகுதிக்கு வரும் அனைத்து வாகனத்தையும் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர். இதில் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் வெளியூர் நபர்கள் வந்தால் தீவிர விசாரணைக்கு பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர். அதேபோல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார். முக்கிய பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதி, பள்ளி வாசல்கள், பல அமைப்புகளின் அலுவலகங்களுக்கு, முக்கிய பிரமுகர் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் நடமாடும் கண்காணிப்பு கேமரா வாகனம் மூலம் முத்துப்பேட்டை நகர் முழுவதும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.