சிவகாசி, செப். 27: சிவகாசியில் மழை காலங்களில் வீணாகும் மழை நீரை, தடுப்பணை அமைத்து சிறுகுளம் கண்மாயில் தேக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் உள்ள பெரியகுளம், சிறுகுளம் கண்மாய் ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கோடை காலங்களில் மாநகராட்சியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. வீடுகளில் இருக்கும் போர்வெல் கிணறுகளிலும், கோடை காலங்களில் நீர்மட்டம் குறைந்து விடுகிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான நீர்நிலை ஆதாரங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால், மழை நீரை தேக்க முடியவில்லை. ஆனால்,மழை காலங்களில் நகரில் சாலை, வீடுகளில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.
நீர்நிலை ஆதாரங்கள் அனைத்தும் மூடப்பட்டதாலும், நீர்ப்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துள்ளதாலும், மழை நீர் வீணாகி வருகிறது. நகரில் உள்ள ஞானகிரி ரோடு, காரனேசன் காலனி, எஸ்எப்ஆர் பெண்கள் கல்லூரி பகுதி, இரட்டை சிலை தெரு, 56 வீட்டு காலனி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், காரனேசன் விலக்கு பகுதியில் சங்கமித்து காய்ச்சல்காரம்மன் கோயில் வாறுகால் வழியாக சென்று, கிருதுமால் ஓடையில் கலந்து மீனம்பட்டி கண்மாய் சென்றடைகிறது. இதனால், மழை நீர் வீணாகி வருகிறது.