கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை(25ம் தேதி) 1126 மையங்களில் மாபெரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை 1126 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோன தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில், காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.