ராமநாதபுரம், செப்.24: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த படி புலம்பெயர் தமிழர் நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என அயலக தமிழர் மறுவாழ்வு நலத்துறை ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ் பேசினார். சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு கருத்தரங்கு ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் புலம்பெயர் தமிழர் மறுவாழ்வு அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ் தலைமை வகித்தார். கருத்தரங்கில் அவர் பேசுகையில், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும், வெளிநாடு வாழ் தமிழர் நலன் கருதி அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வு ஆணையம் அமைத்தார். இதற்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாரியத்தில் பதிவு செய்தோருக்கு விபத்து, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு திட்டம் அடையான அட்டையுடன் வழங்கப்படும். வெளிநாடு செல்லும் குறைந்த வருவாய் பிரிவு தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, திருமண உதவித்தொகை வழங்கப்படும். புலம்பெயர் தமிழர் ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி, வலைத்தளம், கைப்பேசி செயலி அமைத்து தரப்படும். அவர்களுக்கு தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உறுப்பினர் சேர்க்கை விரைவில் துவங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முன் பயண புத்தாக்க பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. இம்மையம் மூலம் வெளிநாட்டு வேலை தொடர்பாக உரிய தகவல், உதவிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு வந்தவுடன் கிடைத்த பணம் மூலம் தொழில் துவங்க மானிய கடன் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்’’ என்றார். கருத்தரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மறுவாழ்வு, அயலக தமிழர் நலத்துறை துணை இயக்குநர் ரமேஷ், ராமநாதபுரம் கோட்டாட்சியர் மரகதநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர், ராமநாதபுரம் வட்டாட்சியர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.