முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ரூ.5.58 கோடியில் 5,504 பேருக்கு மருத்துவ சிகிச்சை

திருப்பூர்,  செப்.24:  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதலமைச்சரின்  விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய  திட்டத்தின் ஆண்டு விழா திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் வினீத் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக  அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் நோய் தடுப்பு  பணிகளிலும் நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பதிலும், நல்ல பொது  சுகாதாரத்தை பராமரிப்பதிலும் தனி கவனம் செலுத்தி நலமான சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ்னா  என்னும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் கடந்த 2018ம் ஆண்டு  செம்டம்பர் மாதம் 23ம் தேதி தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக்  காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்து தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது.  இத்திட்டம் இணைந்ததின் மூலம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்  திட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் வருடத்திற்கு 5 லட்சம் வரை,  அரசு மற்றும் தகுதியுள்ள தனியார் மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக  சிகிச்சை பெறலாம். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் உள்ள அனைத்து  குடும்பங்களும் இத்திட்டத்தில் இணையலாம்.

இத்திட்டத்தில் இணைய எவ்வித  கட்டணமோ, வயது வரம்போ இல்லை. பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்  உங்களது குடும்பத்திற்கு உள்ளதா என்பதை அறிய PMJAY.gov.in என்ற இணைய தளத்தை  பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் திருப்பூர்  மாவட்டத்தில் 2022 ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 5,504 நபர்கள், ரூ.5 கோடியே 57  லட்சத்து 86 ஆயிரத்து 907 மதிப்புள்ள மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக  பெற்றுள்ளனர்.  இந்த திட்டம் குறித்து மேலும் அறிய 14555 அல்லது 1800 425  3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் 1451  வகையான மருத்துவ சிகிச்சைகளும், 151 வகையான தொடர் சிகிச்சைகளும், 38  வகையான பரிசோதனைகள் மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஞ்சை,  நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், அறுவை சிகிச்சை, உடல் எடை குறைப்பு  மற்றும் காது நுண்திறன் கருவி பொறுத்துதல் என உயர் ரக சிகிச்சைகளும்  அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய  யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின்  கீழ் பயனடைந்த 8 பயனாளிகளுக்கு நினைவு பரிசு, புதிதாக சேர்க்கப்பட்ட 5  பயனாளிகளுக்கு அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மற்றும்  தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பகுதி மேலாளர்களுக்கும், காப்பீட்டு  ஒருங்கிணைப்பாளர்களுக்கும் என மொத்தம் 8 நபர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும்  கேடயங்களை கலெக்டர் வினீத் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், இணை இயக்குநர்  (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரேமலதா, உடுமலைப்பேட்டை அரசு  மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, ஊத்துக்குளி அரசு  மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: