கோவை, செப்.24: கோவையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் வரும் 26-ம் தேதி துவங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாணவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு பிரிவுகளில் தேர்வு நடத்த அட்டவணை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள் பள்ளிக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வட்டார கல்வி அலுவலகத்தில் காலை வந்து ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று வினாத்தாளை எடுத்து வந்து தேர்வு நடத்துவதில் சிக்கல் இருப்பதாகவும், தினம் தினமும் ஒரு தகவலை அதிகாரிகள் அளிப்பதால், தேர்வு நடத்துவது குறித்து குழப்பம் இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.