×

சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வழியாக பேருந்து இயக்க வேண்டும்

சிதம்பரம், செப். 24:   சிதம்பரம் அருகே உள்ள சி முட்லூரில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் இருவேளை பாடப்பிரிவுகளாக சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பிச்சாவரம் செல்லும் பேருந்தில் ஏறி மண்டபம் என்ற நிறுத்ததில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அதேபோல் கடலூர் மார்க்கத்தில் இருந்து வரும் மாணவர்கள் தீத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 2.5 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.

கல்லூரி நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது புறவழிசாலை என்பதால் அடிக்கடி விபத்தில் சிக்கி மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் உயிர் இழந்தும் உள்ளனர். நேரத்திற்கு அரசு பேருந்து இல்லாததால் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் மாணவர் மத்தியில் புகார் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் தலைமையில் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு சரியான நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை என மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின் கூறுகையில், கடந்த 2  நாட்களுக்கு முன்பு கல்லூரி நேரத்தின்போது பேருந்து இயக்க வேண்டும் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கனித்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் விளைவாக அன்று ஒருநாள் மட்டும் 8 பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளிலிருந்து பேருந்துகள் வரவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதி அடைகிறார்கள். மேலும் அதிக வெயிலின் காரணமாக நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சிலர் நடந்து செல்லும்போது மாணவிகளை கிண்டல் செய்வதால் தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. கடலூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் சிலவற்றை கல்லூரி வழியாக இயக்க வேண்டும் என கூறினர்.

Tags : Chidambaram Government Arts College ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது