புவனகிரி, செப். 24: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் புவனகிரி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தள்ளி வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து புவனகிரி வர்த்தகர் சங்க நிர்வாகிகள் சார்பில் நெடுஞ்சாலைதுறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, புவனகிரி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் தொடர்ந்து வருவதால் இந்த நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது. இதனால் பண்டிகை கால வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும். அதோடு மட்டுமல்லாது ஆக்கிரமிப்பு அகற்றுவதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.