களியக்காவிளை, செப். 24: களியக்காவிளை போலீசார் நேற்றுமுன்தினம் நள்ளிரவு குழித்துறை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனை ெசய்தனர். அப்போது காரின் பின்பக்கத்தில் சாக்கு மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை காப்புக்காடு குடோனுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்கல் : கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் மற்றும் அவரது உதவியாளர்கள் தேங்காப்பட்டணம் அருகே அம்சி பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்திய போது நிற்காமால் அதிவேகமாக சென்றது. பின்னர் விரட்டி சென்று பிடித்த போது காரை விட்டு விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்த போது அதில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப் பொருள் கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.