ெசய்யாறு பஸ்நிலையத்தில் பரபரப்பு விபத்தில் பலியான கல்லூரி பேராசிரியர் ₹13.65 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

செய்யாறு, செப்.23: விபத்தில் பலியான கல்லூரி பேராசிரியர் குடும்பத்துக்கு ₹13.65 லட்சம் இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஜீவா நகரில் வசித்து வந்தவர் தமிழ்வாணன்(46), கல்லூரி பேராசிரியர். செய்யாறு அரசு கல்லூரியில் பணியாற்றி வந்த இவர் சென்னையில் உள்ள பிரசிடன்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டார். கடந்த 3.10.2005 அன்று தமிழ்வாணன், கல்லூரிக்கு செல்வதற்காக செய்யாறு பஸ் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது, அவர் பஸ்ஸில் ஏறுவதற்குள் திடீரென பஸ் இயக்கப்பட்டதால் தவறி கீழே விழந்ததில் பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, விபத்தில் பலியான தமிழ்வாணன் குடும்பத்தை சேர்ந்தவர்களான அவரது மனைவி கலைவாணி, அவரது சிறுவயது மகன்கள் 2 பேர் மற்றும் அவரது பெற்றோர் என 5 பேர் இழப்பீடு வழங்கக்கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி இழப்பீடு தொகையை வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு 30.01.2017 அன்று உத்தரவிட்டார். பின்னர், இழப்பீடு தொகையை பெறுவதற்காக தமிழ்வாணன் குடும்பத்தினர் மீண்டும் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

அதன் மீது விசாரணை நடத்திய சார்பு நீதிபதி இழப்பீடு தொகை மற்றும் வட்டியும் சேர்ந்து ₹68.50 லட்சத்தை மனுதாரர் குடும்பத்திற்கு வழங்க 20.11.2019 அன்று உத்தரவிட்டார். தொடர்ந்து, போக்குவரத்து துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், மனுதாரர் குடும்பத்திற்கு 5 தவணைகளாக ₹54.85 லட்சத்தை செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் செலுத்தியிருந்தனர். இந்நிலையில், மீதமுள்ள இழப்பீடு தொகை மற்றும் அதற்குண்டான வட்டியும் சேர்த்து செலுத்த தவறிய காரணத்தால் செய்யாறு சார்பு நீதிபதி குமரகுருபரன், அந்த அரசு பஸ்ஸை பறிமுதல் செய்ய 11.08.22 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று மாலை காஞ்சிபுரத்தில் இருந்து சேலத்திற்கு செய்யாறு வழியாக பயணிகளுடன் வந்த அரசு பஸ்ஸை (தடம் எண்: 438) செய்யாறு பஸ் நிலையத்தில் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: