நெல்லை, செப்.23: கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூர் பாலம் அருகே நேற்று அதிகாலையில் எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை டிரைவர் சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார். அப்போது விருதுநகரிலிருந்து நெல்லைக்கு சிமெண்டு மூடைகளை ஏற்றி கொண்டு லாரி வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விருதுநகர் மாவட்டம் மன்னார்கோட்டை ஆவுடையார்புரத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாண்டியை (55) அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பாண்டி இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.