வடலூர், செப். 23: வடலூரில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் அதிவேமாக செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் உயிரிழப்பை தடுக்க போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடலூரில் பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஓட்டுவது படிப்படியாக குறைந்து, பைக் ஓட்டுவது அதிகரித்துள்ளது. வாகன எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கத்திற்கேற்ப சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. சில பெற்றோர்கள் பெருமைக்காக தங்கள் பிள்ளைகளிடம் அதிவேக திறன் கொண்ட பைக்கை வாங்கி கொடுத்து ஓட்ட விடுகின்றனர். மாணவர்கள் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கின்றனர். அதுமட்டுமின்றி பைக்கில் சாகசங்கள் செய்கின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட, வேகமாக செல்கின்றனர். இதனால், சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.